சென்னை, மார்ச் 3–
‘நீட் ரகசியத்தை அப்பா- – மகன் (முதல்வர் மு.க.ஸ்டாலின் – உதயநிதி) உடனடியாக சொல்ல வேண்டும என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
‘‘விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ‘நீட்’ தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட தி.மு.க.வின் ‘நீட்’ ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு தி.மு.க. அந்த ‘நீட்’ ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
அந்த நீட் ரகசியத்தை அப்பா–மகன் (Daddy_son) உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், தி.மு.க. பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.