விழுப்புரம், மார்ச் 2–
நீட் தேர்வு அச்சம் காரணமாக விழுப்புரத்தில் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லுாரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-–26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி (மார்ச்) 7-ம் தேதி ஆகும். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாவது முறையாக
நீர் தேர்வு எழுத பயிற்சி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுபேட்டை அருகிலுள்ள தாதாபுரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்-கிருஷ்ணவேணி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது பிள்ளையான இந்து (19). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். அப்போது நீட் தேர்வில் 350 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஓபிசி சான்றிதழ் பதிவு செய்து அதனை பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று ஓபிசி சான்றிதழை இந்துமதியின் தந்தை மற்றும் சகோதரர் இருவரும் இந்துமதி விடம் அளித்துவிட்டு விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றுள்ளனர். மாலை மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது இந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செய்வதறியாமல் உடலை வீட்டிலேயே வைத்திருந்த நிலையில் இதனை அறிந்த வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் இரவு 11 மணி அளவில் பெண்ணின் வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் கதையாகும்
தற்கொலைகள்
2017ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள குழுமூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அனிதா 12ம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்றும் நீட் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்களையே எடுத்ததால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் தற்கொலை செய்து கொண்டார். 2018ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரவலூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான பிரதீபா தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு காரணமாக அனிதா மற்றும் பிரதீபா ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. 2021ம் ஆண்டு சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் தனுஷ் மேட்டூர் மாசிலாபாளைத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு, தொடர்ந்து நீட் தேர்வு எழுதினார் ஆனால் இரு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்துள்ளார். 3வது முறையாக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த அவர் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் தொடர் கதையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அனிதா தற்கொலை தொடங்கி வரிசையாக ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தில் பலியாகி வருகிறார்கள். தற்போது மேலும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.