இந்தியா புதிய கண்டுபிடிப்பு
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் 2023, ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது
இஸ்ரோவின் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கார்பன்– 14 ஆய்வில் அப்பகுதியின் வயது குறித்த முக்கியமான துள்ளியமான தகவல் வெளிவந்துள்ளது.
சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் 370 கோடி (3.7 பில்லியன்) ஆண்டுகள் பழமையானது என இஸ்ரோவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இது நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த முக்கியமான பார்வையை வழங்குகிறது.
இஸ்ரோவின் இந்த ஆய்வறிக்கை, அறிவியல் ஆய்வுலகில் மதிப்புமிக்கது என ‘நேச்சர்’ இதழில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு கூறுவது என்ன? அது ஏன் முக்கியம்?
நிலவின் தென் துருவத்துக்கு அருகில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தனது சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பெற்றது.
அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்தின் வயதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி புள்ளி’ என, பிரதமர் நரேந்திர மோதி பெயரிட்டார். அந்த இடம் 370 கோடி (3.7 பில்லியன்) ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.
2016-ம் ஆண்டு நேச்சர் இதழில் வெளியான ஓர் ஆய்வின்படி, கிரீன்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட ஒற்றை செல் நுண்ணுயிரிகளின் புதைபடிம எச்சங்களை ஆராய்ந்ததில் அவை 370 கோடி ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது. பூமியில் தோன்றிய உயிரினங்களுள் மிக பழமையான ஒன்றாக இதுதான் கருதப்படுகிறது.
“பூமியுடன் நிலவு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது.” என்கிறார் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
மேலும் பேசிய அவர், “தென் துருவத்தில் தரையிறங்கியதே மிகப்பெரும் சாதனைதான். தற்போது அமைவிட ரீதியில் அப்பகுதி பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது, மதிப்புமிக்கது என்பதால் தான் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது” என கூறினார்.