சென்னை, ஜன. 25–
கவர்னர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன.
நாளை நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள இருக்கிறார். இதையடுத்து முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்தாண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து கவர்னர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்தில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்தார். இந்நிலையில் கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன.