டெல்லி, பிப். 12–
நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை எனவும், பாஜக அரசிற்கு எதிராக பேச துணிபவர்கள் கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை. பாரதீய ஜனதா அரசிற்கு எதிராக பேச துணிபவர்கள் கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடியது. காங்கிரஸ் அரசு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியது. மக்களிடம் வீடு வீடாக சென்று பாரதீய ஜனதா அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதன் வாயிலாக பாரதீய ஜனதா அரசு, பொது மக்களுக்கு எதிராக உள்ளது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்.
பாஜகவை அம்பலப்படுத்துவோம்
பணவிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், வறுமையும் மட்டுமே உயர்ந்து வருகின்றன. 2014ம் ஆண்டு பணவீக்கத்தை குறைப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், பெட்ரோல் விலையை குறைப்போம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாரதீய ஜனதா அரசு செய்யவில்லை. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.