புதுடெல்லி, ஜூலை 19–
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி 330 இடங்களில் வெல்லும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடியின் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் தேசிய அளவில் அண்ணா தி.மு.க.வுக்கு பாரதீய ஜனதா கட்சி மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே தேர்தல்களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறோம்.
அந்த இருபெரும் தலைவர்களின் வழியிலேயே அண்ணா தி.மு.க. செயல்படும்.
பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 9 ஆண்டுகள் மோடி சிறப்பான ஆட்சி அளித்து
உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோதும், இந்தியாவில் பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றது.
தமிழகத்தில் மிகப்பெரிய
கட்சி அ.தி.மு.க.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய, பெரிய கட்சிகள் என்று இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது.
இருந்தாலும் அண்ணா தி.மு.க. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் உள்ளது. அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது.
நேற்றைய தேதி வரையில் 1 கோடியே 72 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்ணா தி.மு.க.வின் பெரிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. 1½ கோடி பேர் உறுப்பினர்களாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் அண்ணா தி.மு.க. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இன்று இளைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை பற்றி இப்போது எதுவும் பேசப்படவில்லை.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட
தி.மு.க. அரசு
பாரதீய ஜனதா கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துகளுடன் இருக்கின்றன. பாரதீய ஜனதா கூட்டணியில் அண்ணா தி.மு.க. சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அண்ணா தி.மு.க.தான் தலைமை. நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்களில் பாரதீய ஜனதா கூட்டணி வெல்லும்.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு மட்டும்தான். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே கனிமொழி, ஆ.ராசா இருவரையும் 2ஜி வழக்கில் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
அண்ணா தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இன்னொரு அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இப்படி ஊழல் செய்வது தி.மு.க.தான். நான் முதலமைச்சராக இருந்தபோது எனது அரசு மீது குற்றம்சாட்டி தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. பொய்யான வழக்கு என்பதற்கு இதுவே உதாரணம். வழக்கை ரத்து செய்துள்ளனர்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மோடி அருகில் அமர இடம்…
டெல்லியில் நடந்த கூட்டத்தில் மோடி அருகில் அமர இடம் கிடைத்துள்ளது. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. சந்தோஷமாக இருக்கிறீர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், நாங்கள் உழைப்பதைத்தான் நம்புகிறோம். என்னிடத்தில் மட்டுமல்ல. மோடி எல்லோரிடத்திலும் நெருக்கமாகத்தான் உள்ளார். அவர் யரிடத்திலும் எந்த பாகுபாடும் பார்ப்பது இல்லை என தெரிவித்தார்.
மோடியுடன் நெருக்கமாக இருப்பதால் மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர் விவகாரத்தில் அவரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாமே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு மு.க.ஸ்டாலினும் தான் கர்னாடக அரசுடன் நெருக்கமாக உள்ளார். கர்னாடக அரசுடன் அவர் பேச மறுப்பது ஏன்? எங்களை பொறுத்தவரையில் மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
கொடநாடு வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். கூறி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவருக்கு வேறு வழிஇல்லை. ஓ.பி.எஸ். இப்போது தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். கொடநாடு வழக்கில் குற்றத்தில் ஈடுபட்டவர்களை அண்ணா தி.மு.க. அரசு கைது செய்தது. அவர்களுக்கு ஜாமீன் போட்டவர்கள் தான் தி.மு.க.வினர் என்றார்.
பேட்டியின்போது எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.