புதுடெல்லி, நவ. 19–
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இம்மாதம் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20–ந்தேதி வரை நடத்தி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் 24–ந்தேதி காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும், தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் உள்ள வக்ப் வாரிய மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 முக்கிய மசோதாக்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 26ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.