புதுடெல்லி,பிப். 2–
நாடாளுமன்றத்தில் அரசின் செயல் திட்டம் பற்றி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இதற்கு முதலீட்டாளர்கள் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி தங்களது செயல்திட்டங்களை இன்று நிறைவேற்றுவது பற்றி ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இதேபோன்று, மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்திட்டம் பற்றி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார்.
இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.