தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது
போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது
10, 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கினார்
சென்னை, ஜூன் 28–
தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார். இந்தாண்டு இந்த விழாவை இன்று மற்றும் ஜூலை 3 என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. விழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்த நடிகர் விஜய், நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையின் அருகில் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இன்று கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:
உங்களுக்கு ஒரு சின்ன அறிவுரை. அது நண்பர்கள் மற்றும் நட்பு தொடர்பானது. ஒருகட்டத்துக்கு பிறகு பெற்றோர்களை விட நண்பர்கள் உடன் அதிகமான நேரம் செலவிடும் சூழல் ஏற்படும். அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். நட்பு என்பது அதுவாக அமைவது, நாம் எப்படி தேர்ந்தெடுக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அது ஒருவிதத்தில் சரி தான். எனினும், உங்களின் நட்பு வட்டாரத்தில் சிலர் தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மாறாக நீங்கள் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதீர்கள். உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்தை கொண்டும் இழந்துவிடாதீர்கள்.
போதை பொருள் பயன்பாடு அதிகரிப்பு
இதனை நான் ஏன் இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், சமீபகாலத்தில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது. போதைப்பொருளை கட்டுக்குள் கொண்டுவருவது அரசின் கடமை. இப்போது ஆளும் அரசு அதலெல்லாம் தவறவிட்டு விட்டார்கள் என்பதை நான் சொல்லவரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை.
அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை, பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். உங்களது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு அதனை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள். say no to drugs என்கிற இந்த உறுதிமொழியை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் சோர்ந்து போக வேண்டாம். வெற்றி முடிவு அல்ல, தோல்வி தொடர்கதை அல்ல. இதனை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.
நல்ல தலைவர்கள் தேவை
எல்லா துறைகளும் நல்ல துறையே; நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் வெற்றிதான். தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை; மாணவர்களான நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை. நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.