சென்னை, டிச. 22:
நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை அணியை தயாரிப்பாளருமான வேல்ஸ் கல்விக் குழும தலைவருமான ஐசரி கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் இணைந்து வாங்கினார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 8 மாநில திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (சி.சி.எல்.) என்ற கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 16-ந்தேதி தொடங்குகிறது.
சென்னை அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யாவை கேப்டனாக கொண்ட இந்த அணியில் கலையரசன், பரத், பிரித்விராஜ், ராணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆலோசகராக நடிகர் சரத்குமார், தூதுவராக நடிகை மீனா நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ உடன் இந்த போட்டியில் பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், பஞ்சாப் டி சேர், கேரளா ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 லட்சமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த விழாவில், ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ அணியின் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் முரளி விஜய், லட்சுமிபதி பாலாஜி, நடிகர்கள் சரத்குமார், ராஜ்குமார் சேதுபதி, வினோத் திவாரி, நடிகைகள் ராதிகா, மீனா, தயாரிப்பாளர் போனி கபூர், ஐசரி கணேஷ் மகள் குஷ்மிதா, ஸ்ரீபிரியா மகன் நாகார்ஜுனா, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் கலந்து கொண்டனர்.
ரூ.5 கோடி ஆக்குங்கள்:
சரத்குமார் யோசனை
விழாவில் ஐசரி கணேஷ் பேசும்போது, “முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்கு இந்த போட்டி ‘கியாரண்டி’ எனலாம். சென்னை அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்” என்றார்.
சரத்குமார் பேசும்போது, “பரிசுத் தொகையை வருங்காலத்தில் ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும். அதேபோல ஆலோசகர், தூதுவர் போன்றவர்களுக்கும் பரிசுத்தொகை அறிவித்தால் சந்தோஷப்படுவோம்” என்றார்.
![]()





