ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
புதுடெல்லி, மே 28–
ஜவுளி தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
கலை, சமூகப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ‘பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ’ ஆகிய நாட்டின் உயரிய விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
நடப்பு, 2025க்கான விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டன. இதன்படி நடிகர் அஜித் குமார் உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த மாதம் 28–ந்தேதி நடந்த விழாவில், 71 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகள் வழங்கினார்.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 68 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த முறை பத்ம விருது பெற்றவர்களின் பட்டியலில் 23 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர், குமிதினி லாகியா (மறைவு), சாரதா சின்ஹா (மறைவு) ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். மறைந்த பத்ம விபூஷண் விருதாளர்கள் சார்பில் குடும்பத்தினர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
6 தசாப்தங்களுக்கும் மேலாக நல்லி பட்டுப் புடவைகளை உலகளவில் பிரபலமாக்குவதில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 87 வயதான புகழ்பெற்ற ஜவுளித் தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
பிரபல நடிகை ஷோபனா சந்திரசேகர், கைலாஷ் நாத் தீக்சித், ஜாலின் கோஸ்வாமி, ஆனந்த் நாக், சாத்வி ரிதம்பரா ஆகியோர் பத்ம பூஷண் விருதை பெற்றனர். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றிய பொருளாதார வல்லுநர் பிபேக் டெப்ராய்க்கு, இறப்புக்கு பின், பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இதை அவரது மனைவி பெற்றார்.
தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, எழுத்தாளர் சீனி விஸ்வநாதன், எம்.டி. ஸ்ரீநிவாஸ், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி மற்றும் நாராயணன் (மறைவு), சாஜன் பாஜங்கா, நீரஜா பாலியா, அஜய், ஹர்சந்திரன் சிங், பீம் சிங், செலான் ஏக்நாத், விலாஸ் கஜனன்ராவ், மகாவீர் நாயக், சோனியா நில்யானந்த், அசூல் ராமச்சந்திர பாலவ், வி.ஆர்.பஞ்சமுகி, லாவ்ஜிபாய், சுவாமி பிரதிபிலானந்தா, கேரளாவை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரரும் நடிகருமான விஜயன் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.
சென்னையை பூர்விகமாக கொண்ட சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
எல்.முருகன் வாழ்த்து
தொழில் அதிபர் நல்லிகுப்புசாமிக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:–
தமிழகத்தின் ஜவுளித்துறையில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்து, தனது அளப்பரிய பங்கினை நல்கி வரும் அய்யா நல்லிக் குப்புச்சாமி செட்டியாருக்கு, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருதினை, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இவ்விருதினை பெற்ற அவருக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
![]()





