சென்னை, மார்ச் 3–
தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையம் – -விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னையில் தற்போது விமான நிலையம் – விம்கோ நகர் வரையும், பரங்கிமலை – சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே இன்று காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமான நிலையம் – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து 30 நிமிடத்திற்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.