சென்னை, மார்ச் 4–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தயாளு அம்மாள் (வயது 92) வசித்து வருகிறார். வயது முதிர்வு சார்ந்த அசவுகரியங்கள் காரணமாக அவர் கடந்த பல ஆண்டுகளாகவே பொதுவெளியில் வருவதில்லை. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்று வந்தார்.
இந்த நிலையில் தயாளு அம்மாளுக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார். அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று தயாளு அம்மாளை பார்த்து, அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். தொடர்ந்து மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு நேரில் சென்று தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல் நிலை, சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் மு.க.அழகிரி கேட்டறிந்தார்.