சென்னை, பிப்.3-–
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதும் மாணவ -மாணவிகளுக்காக இயேசு அழைக்கிறார் நிறுவனத் தலைவர் பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகிறார். அந்தவகையில் நடப்பாண்டில் தேர்வு எழுத உள்ளவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் ஜார்ஜஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விங்ஸ் அரங்கத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதேபோல் இவாஞ்சலின் பால் தினகரனும் பிரார்த்தனை மேற்கொண்டார்.
மேலும் இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சாதனை படைத்தவர்களை சாமுவேல் தினகரன் பேட்டியெடுத்திருந்தார். அதுவும் கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது. அது மாணவ -மாணவிகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இதுதவிர, காருண்யா பல்கலைக்கழக மாணவ -மாணவிகளின் குறுநாடகம், ஸ்டெல்லா ரமோலா, டேனியல் டேவிட்சன், கேத்லினின் பாடல்களும் அரங்கேற்றப்பட்டன.