பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் கண்டனம்
பிரேசிலியா, ஜன. 9–
பிரேசில் நாடாளுமன்ற வன்முறைக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வி அடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால், தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
மோடி, பைடன் கண்டனம்
இதற்கிடையே, பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, உச்சநீதிமன்ற வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள், தற்போதைய அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பிரேசில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், பிரேசிலில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலைகள் பற்றிய செய்தி குறித்து ஆழ்ந்த கவலை அடைந்தேன். ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. அவர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.