செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது

Makkal Kural Official

புதுடெல்லி, பிப்.16-

தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காததால் சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் நிதி வழங்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் ரூ.2,152 கோடி கல்வி நிதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் இன்னும் நிதி வழங்கப்படவில்லை. தேசியக்கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டால்தான் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

வாரணாசியில் நேற்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது காசி தமிழ் சங்கமம் தொடர்பான விளக்கங்களை கூறிய அவரிடம், தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் நிதி மறுக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-–

தேசியக்கல்வி கொள்கையின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களது தாய்மொழி மற்றும் ஆங்கிலம், இதனைத் தொடர்ந்து 3-வது மொழியாக இந்தியையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு மட்டும் இதனை ஏன் ஏற்க மறுக்கிறது? விதிகளின்படி 3-வது மொழியை ஏற்க வேண்டும். ஏற்க முடியாது என்று சொல்வது தவறு. அதனை ஏற்கும் வரை விதிகளின்படி, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது.

தமிழ்நாடு ஏன் இதனை ஏற்க மறுக்கிறது என்றால், இதனை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். விதிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டால் நிதி வழங்கப்படும். தமிழை நாங்கள் படிக்கக்கூடாது என்று சொல்ல வில்லை. 3-வதாக ஒரு மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *