செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் பாலம் தரமாக கட்டாததால்தான் நீரில் அடித்து செல்லப்பட்டது

Makkal Kural Official

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை, டிச.7-

தென்பெண்ணை ஆற்றில் பாலம் தரமாக கட்டாததால் தான் அந்த பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூ.15 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயலால் பெய்த பலத்த மழை மற்றும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பாம்பாற்றில் வந்த வெள்ளம் காரணமாக கடந்த 1-ந் தேதி அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் இடையே கட்டப்பட்ட இந்த பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் தொண்டமானூர், அகரம்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார்.

பின்னர் அவர் தொண்டமானூர் பகுதிக்கு சென்று சேதமான பாலத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஒரு பாலம் கட்ட வேண்டும் என்றால், அந்த பகுதியில் ஏற்கனவே அதிக நீர் எந்த ஆண்டு சென்றது என்பதை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் அதற்கு தகுந்தாற்போல் ஆழத்திற்கு ஏற்ப பாலத்தை வடிவமைப்பு செய்து கட்டியிருந்தால் பாலம் சேதம் அடைந்து இருக்காது.

ஆனால் எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் பாலத்தை கட்டிய காரணத்தினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு பாலம் என்று சொன்னால் தி.மு.க. ஆட்சியின் நிர்வாகம் எப்படி உள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தரமாக கட்டாததால் தான் பாலம் அடித்து செல்லப்பட்டது. அலட்சியத்தோடு பணியை மேற்கொண்ட காரணத்தினால் பொதுமக்களின் வரிப்பணம் ரூ.16 கோடி வீணடிக்கப்பட்டது. இந்த பாலம் சேதமானதற்கு முழு பொறுப்பு மு.க.ஸ்டாலினுடைய அரசு தான்.

சாத்தனூர் அணையில் இருந்து அதிகாலை சுமார் 3 மணி அளவில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால் இந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது. எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சேதமான இந்த பாலத்தை நல்ல தரமானதாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கன மழையினால் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்த 7 பேரின் உறவினர்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். முன்னதாக உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து அவர் உயிரிழந்த 7 பேரின் உறவினர்களிடம் தலா ரூ.1 லட்சம் உதவித்தொகையை வழங்கினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *