தென்காசி, ஏப். 7–
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் முடிந்து, இன்று விழா விமரிசையாக தொடங்கியது. கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் முன்னிலையில் யாக சாலை பூஜை நடைபெற்று வந்தன.
கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக பல திருப்பணிகள் செய்யப்பட்டன. மகா மண்டபம், பிரகார மண்டபம், கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டன. சுதை வேலைகள், பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் புனரமைப்பு போன்ற அனைத்து பணிகளும் நிறைவடைந்தன.
குடமுழுக்கு நிகழ்ச்சி
இன்று காலை 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளை நடத்தினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் போன்ற யாகங்கள் நடைபெற்றன. சைவ சமய ஆதீனங்கள் கலந்துகொண்டு பூஜையைத் தொடங்கி வைத்தனர். குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
ஏற்கனவே பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதேபோல் பாதுகாப்பிற்காக சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.