தூத்துக்குடி, ஜூலை 26–
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடியில் உலகப் புகழ் பெற்ற புனித பனிமய மாதா பேராலயத்தின் 441 ஆவது ஆண்டு திருவிழா இன்று காலையில் தொடங்கியது. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர், ஆலயத்தை சுற்றி கொடி பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்புள்ள கொடிக்கம்பத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கொடியை ஆசீர்வதித்து புனிதப்படுத்தி ஏற்றினார்.
பக்தர்கள் வேண்டுதல்
அப்போது, பனிமய அன்னையை வேண்டி பக்தர்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு நியமித பால், பழம் வழங்கப்பட்டது. இதில், பங்குத்தந்தை குமார் ராஜா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மற்றும் முக்கிய பங்கு நிர்வாகிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதியம் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன், அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தார். தொடர்ந்து மாலையில், திருப்பயணிகளுக்காக சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.