செய்திகள்

துரை வைகோ ராஜினாமா விவகாரம்

Makkal Kural Official

வைகோவின் சேனாதிபதி நான்: மவுனம் கலைத்த மல்லை சத்யா

சென்னை, ஏப். 20–

வைகோவின் சேனாதிபதி நான் என்றும் அதற்கு அடையாளம் என் விரலில் உள்ள அவர் முகம் பதித்த மோதிரம் மற்றும் சட்டை பாக்கெட்டில் உள்ள அவரது புகைப்படம் தான் என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

மதிமுகவில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கு எதிராக நிர்வாகிகள் போர் கொடித் தூக்கியுள்ளனர். வைகோவின் மகனும் மதிமுகவின் முதன்மை செயலாளருமான துரை வைகோ, மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வைகோவின் சேனாதிபதி நான் என பதிவிட்டுள்ளார். அதற்கு தனது விரலில் உள்ள அவர் முகம் பதித்த மோதிரம் மற்றும் சட்டை பாக்கெட்டில் உள்ள அவரது புகைப்படம்தான் அடையாளம் என பதிவிட்டுள்ளார்.

நான் வைகோ சேனாதிபதி

இது தொடர்பான அவரது பதிவில், 2015 ஆம் ஆண்டு மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிரான்ஸ் நாட்டுத் தலைவர் நட்சத்திர பயிற்சியாளர் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ அவர்களின் அழைப்பில் தற்காப்புக் கலை பயிற்சியளிக்க பிரான்ஸ் நாடு சென்று இருந்த போது, வாடிகன் சென்று புனித பேதுரு நல்லடக்கம் செய்யப் பட்ட இடத்தைப் பார்க்க சென்றதையும் அங்கு பெற்ற அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார் மல்லை சத்யா.

அங்கு நான் அணிந்திருந்த மோதிரத்தை கண்டு, போப் அணிவது போன்ற மோதிரமா என சிலர் கேட்டபோது, இது எனது தலைவனின் முகம் பதித்த மோதிரம் என்று பதிலளித்தேன். நான் திராவிட இயக்கப் போர்வாள் புரட்சிப் புயல் வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் என் மோதிர விரலில் தலைவர் வைகோ எம்பி–யின் முகம் பதித்த மோதிரம், சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம், இதுதான் என் அடையாளம் மகிழ்ச்சி. அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த புனித ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்” என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *