இஸ்தான்புல், பிப். 7–
துருக்கி இஸ்தான்புல்லுக்கு இந்தியத் தரப்பிலிருந்து, 100 பேரிடர் மீட்புப்படையினர், மருத்துவர்கள் குழு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், நேற்று மதியம் 3:45 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 3-வது முறையாக மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது.
இந்த நிலையில், சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகிறது.
100 வீரர்கள் பயணம்
அந்த வகையில், இந்தியத் தரப்பிலிருந்து மருத்துவர்கள் குழு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களையும் இந்தியா அனுப்பியுள்ளது. ஆண் மற்றும் பெண் பணியாளர்கள், அதிக திறன் கொண்ட நாய் படைகள், மருத்துவ பொருட்கள், மேம்பட்ட துளையிடும் கருவிகள் மற்றும் உதவி முயற்சிகளுக்கு தேவையான பிற முக்கிய கருவிகள் உள்ளிட்டவை உள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.