செய்திகள்

துருக்கி–சிரியா பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது

இடிபாடுகளிலிருந்து 8 வயது சிறுமியை உயிரோடு மீட்டது இந்தியப்படை

இஸ்தான்புல், பிப்.11–

துருக்கி–சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய மீட்புக்குழுவினர், அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதினானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனிடையே துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி , சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கிக்கு நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

மேலும், மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 152 பேர் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பேரிடர் மீட்புக்குழுவினர் துருக்கியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தின் நுர்டஹி பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 8 வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

இதேபோல நேற்று 6 வயது சிறுமியையும் இந்திய மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டனர். தவிர இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *