அங்காரா, பிப். 17–
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் உலகையே உலுக்கியுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் 9 நாட்களுக்கு பிறகு தாய், 2 குழந்தைகள், 2 ஆண்கள் என 5 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சிரியா எல்லையை ஒட்டிய துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ம் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல நாட்களாக இடிபாடுகளுக்கு இடையில் இருந்தும் உயிருடன் சிலர் மீட்கப்பட்டு வருவது ஆச்சரியமாக உள்ளது.
பூகம்பம் நடந்து 128 மணி நேர போராட்டத்துக்குப் பின் 2 மாத குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. சமீபத்தில் 74 வயது பெண் ஒருவரும் அதன் தொடர்ச்சியாக 46 வயது பெண் ஒருவரும் மீட்கப்பட்டனர்.
இப்போது அன்டக்யாவில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களுக்குப் பிறகு தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
எலா என்ற பெண்ணும் மெய்சம், அலி என்ற அவரது இரு குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. சரியாக 228 மணி நேரம் தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி தன் உயிரையும் அவர் தக்கவைத்துள்ளார். இதேபோல் 2 ஆண்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.