நியூயார்க், பிப். 10–
துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கு நிவாரணமாக துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக வங்கி நிதி
இதுவரை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நிலநடுக்கத்தின் காரணமாக, 78,124-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.15 ஆயிரம் கோடி) வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. மேலும், உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், உடனடி தேவைகள் பற்றிய விரைவான மதிப்பீட்டைத் தயாரித்து வருவதாகவும் கூறினார்.