சென்னை, ஏப். 17–
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருஉருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, மா.சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜன், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, ஈ.ஆர்.ஈஸ்வரன், அரவிந்த் ரமேஷ், கணபதி, பிரபாகர ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வைத்தியநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:–
“ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் இன்று. அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை. அவர் வீரமும் புகழும் வாழ்க” எனப் பதிவிட்டுள்ளார்.