மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, ஆக.3–
தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி, பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் த.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை!ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்
.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.