செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி கண்டனம்

Makkal Kural Official

சென்னை, ஜூன் 14–

தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!

நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான்

வெட்கமாக இல்லையா?

உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே?

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த தி.மு.க. ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.

வி. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன். மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *