செய்திகள்

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா

Makkal Kural Official

திருவள்ளுவர் சிலை, திருக்குறள் வாழ்க்கையின் வாள் – கேடயம்; அழிக்க வரும் தீமைகளை அழிக்கும்: ஸ்டாலின் பேச்சு

சென்னை, டிச.31–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியீட்டார்.

மேலும் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னவுடன், அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என்று நான் சொன்னேன். உடனே சில அதிமேதாவிகள், ஒரு சிலை அமைப்பதற்கு எதற்கு விழா நடத்தவேண்டும் என்று கேட்க தொடங்கினார்கள்.

திருவள்ளுவர், தமிழர்களுக்கு இருக்கக்கூடிய உலக அடையாளம். திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம்! கொண்டாடுவோம்! கொண்டாடிக் கொண்டே இருப்போம்.

வள்ளுவருக்கு

பெருமை சேர்த்தார்

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே, சட்டமன்றத்தில் வாதாடி வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் கலைஞர். போக்குவரத்துத் துறை அமைச்சரானதும், அனைத்து பேருந்துகளையும் திருக்குறளை எழுதினார். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, அனைத்து அரசு விடுதிகளிலும், திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெற வைத்தார். காவலர் பதக்கத்தில் வள்ளுவரைப் பொறித்தார். தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் ஆண்டை அரசின் சார்பில் ஏற்றுக்கொண்டு அறிவித்தார்.

மயிலாப்பூரில், திருவள்ளுவர் நினைவாலயம் அமைத்தார். சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம் அமைத்தார். குறளோவியம் தீட்டினார். திருக்குறளுக்கு உரை எழுதினார். இப்படி திருக்குறளுக்காகவே வாழ்ந்தார். இந்த கம்பீர வள்ளுவர் சிலைக்கு கலைஞர் காரணகர்த்தா என்றால், சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி தான் கலைக்கர்த்தா! இந்தச் சிலையை பற்றி சொல்லவேண்டும் என்றால், திருக்குறளின் அதிகாரங்களை குறிக்கின்ற வகையில், 133 அடி உயரம். அதில், அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கின்ற வகையில், பீடம் 38 அடி. அறம் என்ற பீடத்தில் பொருளும் -இன்பமுமாக 95 அதிகாரங்கள் சிலையாக இருக்கிறது.

7 ஆயிரம் டன் சிலை

தலைமீது தூக்கி முடிந்திட்ட கொண்டையையே மகுடமாக கொண்டு – இடுப்பில் பட்டாடையையும் – மார்பில் மேல் துண்டும் – வலது கையானது அறம், பொருள், இன்பம் என்பதைக் காட்டும் மூன்று விரல்களாகவும் – இடது கையில் குறள் ஓலைச் சுவடிகளும் இருப்பது போல அமைத்திருக்கிறார் கணபதி ஸ்தபதி.

7 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தச் சிலையில், 3,681 கற்கள் இருக்கிறது. இத்தனைக் கற்களைக் கொண்டு ஒரு சிலையை உருவாக்கலாம். ஆனால், அதை ஒரு பாறையில் தூக்கி நிறுத்தி வைத்திருப்பது தான் இந்தச் சிலையின் பெருமை!

133 அடிக்கு சிலை வைக்க, 180 அடிக்கு சாரம் கட்டி இதை அமைத்தார்கள். 500 சிற்பிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். தஞ்சை பெரிய கோயில் வடிவமைத்த குஞ்சரமல்லனின் வம்சத்தைச் சேர்ந்தவர்தான் கணபதி ஸ்தபதி.

3 புதிய படகுகள்

இந்த திருக்குறள் விழாவை முன்னிட்டு, சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன்.

* முக்கடல் சூழும் குமரிமுனையில் இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் திருவள்ளுவர் சிலையை சென்றடைய பயனடைவதற்காக படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.

* முதல் படகிற்கு தியாகத்தின் உருவாகி, தொண்டின் கருவாகி, தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராசர் பெயரும், இரண்டாம் படகிற்கு தென்குமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி போராடி சாதனைப் படைத்த சாதனையாளர் மார்சல் நேசமணி பெயரும், மூன்றாம் படகிற்கு கனடாவில் பிறந்தாலும், கன்னித்தமிழ் வளர்த்தவரும், திருக்குறளை மொழிப் பெயர்த்தும், தமிழ் இலக்கண நூலை எழுதியும், அழியாப் படைப்புகளை அளித்த ஜி.யு.போப் பெயரும், என மூன்று பெயர்களும் அந்தப் படகுகளுக்கு சூட்டப்படும்.

மாவட்டந்தோறும் பயிரலங்குகள்

* ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ‘திருக்குறள் திருப்பணிகள்’ தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டிற்கு மாவட்டம் ஒன்றிற்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும். குறள் வாரம்

* ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும்.

* தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

* திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுகிறது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தீமைகளை தடுக்கும்

கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

திருவள்ளுவர் வெறும் சிலையல்ல; திருக்குறள் வெறும் நூல் அல்ல; நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும்! அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும்.

நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும். தனி மனிதர் முதல் அரசு வரைக்கும் நீதிநெறி சொன்னவர் வள்ளுவர். நாம் செய்ய வேண்டியது, பள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் இன்னும் அதிகமாக இடம்பெறச் செய்யவேண்டும். இது அரசுக்கான உத்தரவு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வள்ளுவம் வாழ்வியல் நெறியாக மாறட்டும். சமுதாயம் குறள் சமுதாயமாக மலரட்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

—–இந்த நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு, மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா, அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *