7 மாதமாக நடைபெற்ற பாராமரிப்பு பணி நிறைவு
கன்னியாகுமரி, மார்ச் 6–
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்து, 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு மீண்டும் இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே 133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலைக்கான பராமரிப்பு பணிகளுக்காக, கடந்த 7 மாதங்களாக பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பார்வையிட இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அனுமதி
கடலின் அருகில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் அடிக்கடி உப்புக் காற்றினால் சேதமடையாமல் இருப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன்மீது ரசாயனக்கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நடைபெற்ற பராமரிப்பு பணியில், திருவள்ளுவர் சிலையின் மீது படிந்துள்ள உப்பினை முழுவதுமாக அகற்றி தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, ஜெர்மனியில் இருந்து கொண்டுவரப்பட்ட ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவுற்றது.
தற்போது இந்த பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதால் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. தற்போது 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.