நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை, டிச.23–-
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தையொட்டி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவதால் அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. விழாவின் நிறைவாக, கடந்த 13–ம் தேதி மாலை 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.
மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிப்பது வழக்கம். அதையொட்டி, தீபம் ஏற்றும் திருப்பணியை மேற்கொள்வோர், மலையில் முகாமிட்டு தினமும் தீபம் ஏற்றி வருகின்றனர். மகாதீபம் இன்று (23ந்தேதி) இரவுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், மலையில் மகாதீபம் காட்சியளிக்கும் நாளில் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்புகின்றனர். எனவே, தீபத்திருவிழா முடிந்த பிறகும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், வார விடுமுறை நாள் என்பதாலும், மகாதீபம் இன்றுடன் நிறைவடைய உள்ளதாலும் நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
குறிப்பாக, வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்தது. அதோடு, சபரிமலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு கோபூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் மார்கழி மாதத்தையொட்டி திருவெம்பாவை பாராயணம் செய்யப்பட்டது. நடை திறக்கும் முன்பே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அண்ணாமலையார் கோயிலில் மாடவீதி வரை தரிசன வரிசை சுமார் 1 கிமீ தூரம் நீண்டிருந்தது. எனவே, சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், ரூ.50 கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. கோயிலில் தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
விரைவு தரிசனத்துக்காக ஒற்றை வழி தரிசன முறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால், கோயிலில் வேறு எந்த சன்னதிகளையும், பிரகாரங்களையும் தரிசிக்க முடியாமல் நேரடியாக சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியை மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பும் நிலை ஏற்பட்டது.
தரிசனம் முடித்த பக்தர்களுக்கு இலவச பிரசாத திட்டத்தின்கீழ் லட்டு வழங்கப்பட்டது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாடவீதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டது. ஆனாலும், வடஒத்தைவாடை தெரு, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.