திருவண்ணாமலை, ஏப். 20–
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மாற்றத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக அவர்களின் நலனை காத்து உரிமை நிலை நாட்டும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவியின்றி வெளியில் செல்ல இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024–-2025 ஆம் ஆண்டிற்கான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.10078200/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக சேத்துப்பட்டு வட்டம் கெங்காபுரம் புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைத்தல் பணிக்காக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் காசோலையினையும், ஒரு பயனாளிக்கு ரூ.6700 மதிப்பிலான சலவை பெட்டியினையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, துணை மேயர் சு.ராஜாங்கம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.