செய்திகள்

திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் சிறுமிக்கு

Makkal Kural Official

பாலியல் தொல்லை: போக்சோ

சட்டத்தில் சப்-–இன்ஸ்பெக்டர் கைது

மதுரை, ஜன. 12–-

திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள கழிப்பறைக்கு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மதுரை திடீர் நகர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-–இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் (வயது 51). கடந்த மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக ஜெயபாண்டியன் சென்று இருந்தார்.

இந்த நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 14 வயது சிறுமி, கிரிவலப்பாதையில் உள்ள ஒரு கழிப்பறைக்கு சென்றார். அப்போது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் அந்த சிறுமியை பின்தொடர்ந்து கழிப்பறைக்குள் சென்றதாகவும், அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. உடனே அலறியபடி வெளியே ஓடிவந்த அந்த சிறுமி, பெற்றோரிடம் நடந்ததை கூறினாள்.

இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் மதுரை சைல்டுலைன் அமைப்பு மூலமும் புகார் அளித்தனர். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் அதிகாரிகள் விசாரித்தபோது, பாலியல் புகாரில் முகாந்திரம் இருந்த நிலையில், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நடவடிக்கை எடுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியனை பணியிடைநீக்கம் செய்து சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

அதன்பின்னர் தொடர் விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது ஜெயபாண்டியன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து கைதானது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபாண்டியன் மீது ஏற்கனவே திருநங்கை ஒருவரும் புகார் அளித்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *