திருப்பதி, நவ. 30–
திருப்பதி ரெயில் நிலையத்தில் திருமலா விரைவு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பேருந்து, ரெயில் பயணத்தையே பயன்டுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை திருப்பதி வந்தது திருமலா விரைவு ரெயில். பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து இறங்கிச் சென்றனர்.
ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்றி நின்றிருந்த திருமலா ரெயிலில் எஸ்–6 முன்பதிவு பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் சத்தமிட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்ப வீரர்கள் எஸ்–6 முன்பதிவு பெட்டியின் கழிவறையின் மேல்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் கழிவறையில் வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.