ஐதராபாத், பிப். 10–
திருப்பதி லட்டு கலப்பட புகார் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த நெய் சப்ளை நிறுவனர் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
ஆந்திராவின் திருப்பதி – திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அந்த லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, 5 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு கடந்த நவம்பரில் அமைக்கப்பட்டது. சி.பி.ஐ. இயக்குனர் மேற்பார்வையில் இந்த குழு விசாரணை நடத்தும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு ஆந்திராவின் திருமலை திருப்பதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தீவிர விசாரணை நடத்தியது.
இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொம்மில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தின் சிஇஓ வினய் காந்த் சவுடா, திண்டுக்கல் தனியார் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன் உள்பட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் லட்டு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.