செய்திகள்

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Makkal Kural Official

புதுடெல்லி, அக்.4–

திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இரண்டு சிபிஐ அதிகாரிகள், இரண்டு ஆந்திர பிரதேச காவலர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

புதிய சிறப்பு விசாரணைக் குழு, 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், 1 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய பிரதிநிதி ஆகியோரைக் கொண்டதாக இருக்கும் என அறிவித்த நீதிமன்றம், இந்த விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் மேற்பார்வையின் கீழ் விசாரித்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.இதனை மாநில அதிகாரிகளின் நேர்மைக்கு எதிரானதாக கருத வேண்டாம், கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்காக மட்டுமே குழு அமைத்துள்ளோம் என தெரிவித்தனர்.

சந்திரபாபு நாயுடு

செயலுக்கு அதிருப்தி

முன்னதாக கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செயலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டதன் காரணம் என்ன? முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள் (சந்திரபாபு நாயுடு) இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்? பக்தர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் இதுபோன்ற ஒரு அறிக்கை மாநில அரசால் வெளியிடப்பட்டிருக்க வேண்டுமா? இதனை பொதுவெளியில் பேசியது ஏன்? மேலும், நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை.

சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்துள்ள மாநில அரசு, அதன் அறிக்கை வருவதற்கு முன்னே ஊடகங்களில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கிவைக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *