பக்தர்கள் பீதி
திருமலை, ஆக. 12–
திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் திருமலைக்கு நடைபாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் சிலர் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றன.
இந்த நிலையில்ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார், அவரது மனைவி சசிகலா, இவர்களது மகள் லக்ஷிதா (வயது 6) ஆகியோர் நேற்று திருப்பதிக்கு வந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு பெற்றோருடன் லக்ஷிதா என்று சிறுமி திருமலைக்கு அலிபிரி மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே பிஸ்கெட் பாக்கெட் வாங்குவதாக கூறி, பெற்றோருக்கு சற்று முன் சிறுமி லக்ஷிதா நடந்து சென்றுக்கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி அலைந்தனர். நீண்ட நேரமாகியும் மகள் கிடைக்காததால் பதற்றம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் சிறுமி லக்ஷிதாவை வனப்பகுதி முழுவதும் தேடி வந்தனர்.
மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுமி பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சிறுமி லக்ஷிதா நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் சாணம் கிடந்ததை அடுத்து, சிறுத்தை தான் சிறுமையை இழுத்துச் சென்று அடித்து கொன்றிருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.தனது மகளின் சடலத்தை கண்டு பெற்றோர், உறவினர் கதறி அழுதனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோருடன் இதே போன்று திருமலைக்கு மலையேறி சென்றுக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்விக்கொண்டு ஓடியது. ஆனால் பெற்றோர், பக்தர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சிறுத்தையை துரத்தியபடி ஓடிச்சென்றதால் அது சிறுவனை ஒரு புதர் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியது. பின்னர் அந்த சிறுத்தையை தேவஸ்தானத்தினர் பிடித்து மீண்டும் வனப்பகுதியிலேயே விட்டனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டு இருந்த போலீஸ்காரர் மற்றும் பக்தர் மீது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து மலையில் உள்ள நடைபாதையில் இருபுறமும் இரும்பு வேலி அமைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அப்போதைய அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி ஆகியோர் அறிவித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தினால் ஒரு சிறுமியின் உயிர் பறி போய் உள்ளது என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளையும், அவர்களின் அலட்சியப் போக்கையும் கண்டித்துள்ளனர்.