திருச்சி, மார்ச் 24–
திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது.
சோதனையில் திருச்சி வந்த ஒரு பயணியின் உடமைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 5 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இவர் போதைப்பொருள் கடத்தல் ‘குருவி’யா இருக்கலாம் என்றும், கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.