சென்னை, மார்ச்.18-
சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் கேண்டீனில் எழுந்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட கேண்டீனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் குளிர்பானங்கள் சேதமடைந்தும், பாப்கார்ன்கள் கெட்டுப்போயிருந்ததும், பப்ஸ் மற்றும் சிப்ஸ்கள் உள்ளிட்ட நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் காலாவதி தேதி இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. அந்தவகையில் தரமற்ற – கெட்டுப்போன சுமார் 500 கிலோ அளவிலான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கேண்டீனின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, நகரின் பல தியேட்டர்களிலும் இதுபோல ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. இதற்காக சிறப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னையில் உள்ள பல தியேட்டர்களில் உணவு பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் வருகின்றன. இதையடுத்து அதிரடி சோதனை மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே தியேட்டர் கேண்டீன்களில் விரைவில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்படும். தவறுகள் கண்டறியப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் ரகசியமாக வைக்கப்படும். உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றனர்.