செய்திகள்

திமுக முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : மார்க்சிஸ்ட்

Makkal Kural Official

சென்னை, மார்ச் 20–

திமுக கொடிக் கம்பங்களை அகற்ற பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.

தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் பழைய தீர்ப்பை மார்ச் 6ஆம் தேதி உறுதி செய்தது.

இதையடுத்து அறிக்கை வெளியிட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நெருக்கடி தந்துள்ள

துரைமுருகன் அறிக்கை

இந்நிலையில் துரைமுருகனின் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தேனி கூட்டத்தில் பெ.சண்முகம் கூறியபோது, “துரைமுருகனின் இந்த அறிவிப்பு, எங்களை போன்றவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறது. குறைந்தபட்சம், அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்த தீர்ப்பு குறித்து, மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம்.

இல்லையானால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து, அந்த தீர்ப்பு குறித்து கலந்தாலோசித்திருக்கலாம். ஆனால் எந்த அணுகுமுறையும் மேற்கொள்ளாமல், ‘நாங்கள் கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்கிறோம்’ என தன்னிச்சையாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இது திமுகவின் சொந்த பிரச்சனை அல்ல.

அரசியல் கட்சி, கொடி என அனைத்தும் சட்டத்தில் இருக்கக்கூடிய விஷயம். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என கூறி இருந்தால் சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும் திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *