செய்திகள்

திண்டிவனத்தில் 1 கிமீ நடந்து சென்று மக்களிடம் குறைகேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Makkal Kural Official

திண்டிவனம், ஜன.28-–

திண்டிவனத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றார்.

மாவட்ட எல்லையான ஓங்கூரில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டு திண்டிவனத்துக்கு மாலை 6.30 மணியளவில் வந்தார்.

திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இறக்கத்தில் இருந்து விழுப்புரம் சாலை வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரில் வந்தார். வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைப்பார்த்து அவர், சிறிது தூரம் காரில் இருந்தவாறே கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடி சென்றார்.

திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து கீழே இறங்கி கையசைத்தவாறும், வணக்கம் தெரிவித்தபடியும் நடந்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

பொதுமக்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்ததுடன் அவருக்கு சால்வை கொடுத்தும், கைகுலுக்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெண்கள் பலரும், மலர்தூவி முதலமைச்சரை வரவேற்றனர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நின்றிருந்த மாற்றுத்திறனாளிகளை பார்த்ததும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அவர்களது குறைகளையும் கனிவோடு கேட்டறிந்தார்.

அவர் நடந்து வந்த வழியில், தொண்டர் ஒருவரின் கைக்குழந்தை தூக்கி முத்தமிட்டு கொஞ்சினார். நாட்டுப்புற கலைஞர்கள் கோலாட்டமாடி முதலமைச்சரை வரவேற்றனர். அப்போது அவர்களிடம் இருந்த குச்சிகளை வாங்கி அவர்களுடன் கோலாட்டமாடினார். இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

நிகழ்ச்சிகளில் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட செயலாளர்கள் டாக்டர் சேகர், டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *