காலை 11 மணி. ராஜ்குமார் அய்யா வீட்டில் காலை உணவு,
மாலை உணவு ஆகிய 2 வேளையும் உணவு சமையல் செய்து கொடுத்துவிட்டு தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் ஜெசி.
காலை நேரத்து உணவை ராஜ்குமார் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டதால் சற்று ஓய்வு எடுப்பதற்காக சேரில் அமர்ந்தாள் ஜெசி.
அப்போது வீட்டுக் கதவு பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது.
கதவைத் தட்டிக் கூப்பிடுவது யார்? சேரிலிருந்து வேகமாக எழுந்து சென்றாள்.
கதவைத் திறந்தபோது கதவுக்கு வெளியே 12 வயது மதிக்கத்தக்க சின்னப் பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
அந்தச் சின்னப் பெண்ணை பார்த்ததும் ‘‘பாப்பா! நீ யாரு? உன் பேரு என்ன? நீ யாரைப் பார்க்க வந்தே’’ என்று கேள்விகளைக் கேட்டாள் ஜெஸி.
ஜெஸி கேட்ட கேள்விகளை எல்லாம் காதில் வாங்கிக் கொண்ட சின்னப்பெண் ஜெஸியிடம் பேசத் தொடங்கினாள். ‘‘அக்கா! என் பேரு ஜெயலட்சுமி, எங்க வீடு ராஜ்குமார் அய்யா வீட்டுக்கு பக்கத்து வீடு. நீங்க ராஜ்குமார் அய்யா வீட்டிலே வேலை செய்யற சமையல்கார அக்கான்னு எனக்குத் தெரியும், நான் உங்களைப் பார்த்திருக்கிறேன். நான் உங்களைப் பாரக்கிறதுக்காகத்தான் ஓடி வந்தேன். ஏன் தெரியுமா? என்று கேட்டாள் சிறுமி ஜெயலட்சுமி. அதற்கு ஜெஸி ‘‘ஜெயா பாப்பா! என்னை எதுக்குப் பார்க்க வந்தே?’’ என்று ஆர்வத்தோடு கேட்டாள்.
ஜெசி கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லும் விதமாக ‘அக்கா! நம்ம ராஜ்குமார் அய்யா உங்களை உடனே அழைச்சிட்டு வரச்சொல்லி எங்கிட்டச் சொன்னாரு. காரணம் என்ன? என்பதைப் பத்தி அவரு எங்கிட்ட சொல்லலை, உடனே கிளம்புங்க’’ என்று உத்தரவு போட்டாள் சிறுமி ஜெயலட்சுமி.
70 வயது மதிக்கத்தக்க ராஜ்குமார் அய்யா உடனே வீட்டுக்கு வரச்சொல்லிக் கேட்டுக் கொள்வது ஏதோ ஒரு அவசரம் என்பதைப் புரிந்து கொண்ட ஜெசி தன்னைப் பார்க்க வந்த சிறு ஜெயலட்சுமியைத் தன்னுடைன் அழைத்துக்கொண்டு ராஜ்குமார் அய்யா வீட்டுக்குச் சென்றாள்.
ஜெஸியைப் பார்த்ததும் ராஜ்குமார் அய்யா ‘‘ஜெசி! உன்னை மறுபடியும் என் வீட்டுக்கு வரச்சொன்னது எதுக்குன்னு தெரியுமா? நான் சொல்றதைப் பொறுமையாய் கேளு. இந்த வீட்டிலே நானும் என் மனைவியும் தான் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவா இருக்கிற மகன் கடலூரிலே வேலை செய்யறான். அவனுக்கும் குடும்பம் இருக்குது. இந்த வருஷம் நவம்பர் மாசம் வீசின புயலாலே என் மகன் ஜான்சன் வீடு பாதிச்சுது. சேதம் அதிகம். அதனாலே செலவும் அதிகம். இந்தச் சூழ்நிலையிலே இந்த வருஷம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வேண்டாம்னு என் மகனுக்கு ஆலோசனை சொன்னேன். ஆனா, என் மகன் ஆலோசனையைக் கேட்க மறுத்து என்ன பதில் சொன்னான் தெரியுமா? என்று கேட்டு சற்று இடைவேளை விட்டார் ராஜ்குமார்.
ராஜ்குமார் அய்யா சொல்ல வந்தது என்ன? என்பதைக் கேட்கும் ஆவலில் ஜெசி தனது எஜமான் ராஜ்குமாரைப் பார்த்து ‘‘அய்யா! உங்க மகன் என்ன சொன்னாரு’’? என்று கேட்டாள். அதற்கு ராஜ்குமார் அய்யா ,
‘‘ஜெசி! என் மகன் ஜான்சன் எங்கிட்டப் பேசும்போது அப்பா!, புயல், மழை, வெள்ளம் எல்லாம் வருவது சகஜம், இதெல்லாம் வாழ்க்கையில் வரும், போகும், புயலினாலே வீடு சேதமடைந்சதைப் சரி செய்ய எனக்கு சக்தி இருக்குது, கடன் உதவியும் கிடைக்கும். வருஷத்துக்கு ஒரு முறை வரும் பண்டிகை கிறிஸ்துமஸ். அந்தப் பண்டிகையைக் கடன் வாங்கியாவது கொண்டானும், நாம் கொண்டாடும் பண்டிகையில் ஆடம்பரம் வேண்டாம், அதிகபட்ச அலங்காரம் வேண்டாம். எளிமையாய் கொண்டாடுவோம்., அதே சமயத்தில் நம்மால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு செய்வோம். உங்களுக்கு வழக்கம்போல மாதச் செலவுக்கு பணம் அனுப்பறேன் சந்தோஷமா இருங்கன்னு போன்லே பேசினான். அவன் பேசிய பேச்சு எனக்கு ஆறுதலாக இருந்தது. என் மகன் கஷ்டபடக் கூடாதுன்னு நெனச்சு உனக்கு தரவேண்டிய 2000 ரூபாய் போனஸ் பணத்தை நிறுத்தி வைக்காமல் உனக்குத் தர்றேன். நாளைக்கு வீட்டுக்கு வந்து வாங்கிட்டுப் போ ஜெஸி. நமக்குத் திண்டாட்டம் வந்தாலும் நமக்காக மாட்டுத் தொழுவத்தில் மனிதனாய்ப் பிறந்த கிறிஸ்துவைப் போற்றும்படியாக கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடணும்னு எனக்குப் புத்தி சொன்ன மகன் ஜான்சனுக்கும் ஆணவருக்கும் நன்றி. சரிம்மா ஜெசி நீ வீட்டுக் போ’’ என்றார் ராஜ்குமார் அய்யா.
எஜமான் ராஜ்குமார் சொன்ன நல்ல செய்தியைக் கேட்டு அவருக்கு கைகூப்பி நன்றி சொல்லி விட்டுத் தனது வீட்டுக்கு மனமகிழ்ச்சியோடு சென்றாள் ஜெசி.