செய்திகள்

திட்டமிட்டபடி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும்

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம்

டெல்லி, டிச. 10–

கட்டட வடிவமைப்பில் செய்யப்பட்ட மாறுதலால் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது என, இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

மக்களவையில் நடைபெற்ற கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடர்பாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் தெரிவித்ததாவது:-

வடிவமைப்பில் மாறுதல்

“மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தற்போது, கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் கட்டும் பணியும் விரைவில் தொடங்கும். கட்டிட வடிவமைப்பில் செய்யப்பட்ட மாறுதல்களே இந்த தாமதத்திற்கு காரணம். அதனால், இந்தக் கட்டிடத்திற்கான திட்ட செலவு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக உயர்ந்து விட்டது.

கல்லூரியின் கட்டுமான பணியை திட்டமிட்டபடி விரைவில் முடிப்போம். மதுரையில், நல்ல, தரமான எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதேபோல், மருத்துவ கல்லூரிகளில் உரிய கல்வித்தகுதி கொண்ட ஆசிரியர்களை நியமிப்பது மிக முக்கியம். அவ்வாறு நியமிக்கும் போது அது மாநில கல்லூரியாக இருந்தால் அது மாநில அரசின் பொறுப்பு. தனியார் கல்லூரியாக இருந்தால், அந்த கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பு.

தகுதியான ஆசிரியர்கள்

அத்துடன், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நாங்கள் ஆய்வு குழுக்களை அனுப்பி வைக்கிறோம். உரிய கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லூரிகள் மீது கடந்த காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை வருங்காலத்திலும் எடுக்கப்படும்.

அதேபோல், முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவ கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தயங்க மாட்டோம். ஏனென்றால், மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதுடன், நல்ல மருத்துவர்களையும் நாம் உருவாக்க வேண்டி உள்ளது என்று மன்சுக் மாண்டேவியா தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *