அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு
சென்னை, டிச. 5–
தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் பலியானார்கள்.
சென்னை தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து, பல்லாவரம் மலைமேடு பகுதியில் அமைச்சர் த.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அவர், உடனடியாக அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசுகையில், ’23 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் சாப்பிட்ட உணவுகளில் ஏதேனும் பிரச்னையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் மூலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்தப் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கும். இன்னும் ஒரு மணி நேரத்தில் காரணம் தெரிய வந்துவிடும், எனக் குறிப்பிட்டுள்ளார்.