மதுரை, செப் 11
பணியில் மெத்தனமாக நடந்துகொண்ட தாசில்தார் உள்ளிட்ட 4 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.
மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பணி ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
இளைஞர்நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அரசின் சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது சில அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியில் மெத்தனமாக நடந்துகொண்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மதுரை தெற்கு வட்ட தாசில்தார் சரவணன், திருப்பரங்குன்றம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோல செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
இதுதவிர ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் தாசில்தார் உள்ளிட்ட 4 பேர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 2 விடுதி காப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அதிரடி நடவடிக்கையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ளார்.