தேசிய தொழில்நுட்ப அமைப்பு ஏ.இளையபெருமாள் வழங்கினார்
சென்னை, ஏப் 20:
வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஏ.இளையபெருமாள் வலியுறுத்தினார்.
வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் பொறியியல் கல்லூரியில் 23-–ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஏ. இளையபெருமாள் பேசியதாவது:
அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் தங்கள் தொழில்நுட்பக் கல்வி, திறமைகளைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய விரும்பும் அனைவரும் அதற்குத் தகுதியுடையவர்களாக தங்களை மேம்படுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்.எதிர்வரும் சவால்களை கண்டு அஞ்சாமல் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தவறான பழக்கங்களுக்கு அடிமையாகாமல் உடல் நலத்தைப் பேண வேண்டும். வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் ஆர்வம் செலுத்தும் இளம் பொறியாளர்கள், சொந்தமாக தொழில் தொடங்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் கல்வி, வளர்ச்சி முன்னேற்றத்திற்கு அடித்தளமாகத் திகழ்ந்த பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் மறவாமல், தொடர்ந்து அவர்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், 310 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் ஆர்.ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.