சென்னை, பிப்.11–
நேற்று விஜய்யுடன் ஆலோசனை செய்த நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி, புதிய மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர், அண்ணா தி.மு.க.வில் இருந்து வந்த சி.டி. நிர்மல்குமாருக்கு துணை பொதுச்செயலாளர், நடிகர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என முக்கிய பிரமுகர்களுக்கு பொறுப்புகள் வழங்கினார்.
இதற்கிடையே விஜய்யை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில், பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மதியம் 3 மணி முதல் மாலை 5.30 வரை என 2½ மணி நேரம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசியல் நிலவரம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? எந்தெந்த கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும்? மக்களின் மனங்களை கவருவதற்காக என்னென்ன பிரச்சார யுக்திகளை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் விவரித்ததாக கூறப்படுகிறது. விஜய் உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பை ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.
இதன்தொடர்ச்சியாக இன்று த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு ஆதவ் அர்ஜூனா இல்லத்தில் நடந்தது.
பாஜக, ஆம் ஆத்மி, தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டுள்ளார்.
தேர்தல் நேரங்களில் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்துள்ள பிரஷாந்த் கிஷோர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பிரஷாந்த் கிஷோரின் இந்த சந்திப்பானது தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.