சென்னை, மே 8–
தமிழில் வளர்ந்து வரும் இளம் வில்லன் நடிகர் சம்பத்ராமுக்கு (வயது 54), மலையாளத்தில் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரம் என்றாலும், முகமலர்ச்சியுடன் ஏற்று, சிரத்தையாக நடித்து, அனைவரின் பாராட்டுக்களைப் பெற்று வருபவர் இவர். தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து கொண்டிருப்பவர், பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருபவர்.
தற்போது தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் மட்டுமல்ல பான் இந்தியா படங்களின் நடிகராகவும் வெற்றி வலம் வருகிறார்.
இந்நிலையில், திரையுலகம் மற்றும் எழுத்துலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வரும் மலையாள புரஷ்காரம் சமிதி, நடிகர் திலீப் நடித்த ‘தங்கமணி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்த சம்பத் ராமுக்கு, சிறந்த வில்லன் நடிகருக்கான ‘மலையாள புரஷ்காரம் 1200′ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கேரளாவின் கவுரவம் மிக்க விருதுகளில் ஒன்றான இவ்விருதுக்குரியவர்களை அம்மாநில பத்திரிகையாளர்கள், கலை மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் எழுத்தாளர்கள் குழு தேர்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சம்பத்ராம் கூறுகையில், “பெரிய நடிகர்களின் படங்களில் முக்கிய வில்லனாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்காக நான் பல வருடங்களாக கடுமையாக உழைத்தாலும், தமிழில் அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. நிச்சயம் அந்த இலக்கை அடைவேன். எனக்கான அங்கீகாரம் பெறுவேன்” என்றார் பெருமிதத்தோடும் மகிழ்ச்சியோடும்.
போலீஸ் 1999ல் ‘முதல்வன்’ (ஷங்கர் இயக்கம்) படத்தில் (சப்இன்ஸ்பெக்டராக) அறிமுகமானார். தீனா, திமுரு புடிச்சவன், காஞ்சனா (அகோரி வேடம்), திட்றோம் தூக்கறோம்… உள்பட இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 200வது படம் : ‘காசாகாசா’.