செய்திகள்

தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Makkal Kural Official

நந்தனம் அரசு கல்லூரியில் கலைஞர் கலையரங்கத்தை திறந்து வைத்தார்

சென்னை, ஏப்.21-–

‘நீட்’, மும்மொழி கொள்கை என மத்திய அரசு தொந்தரவு கொடுத்து தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்’’ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாகத் தாக்கினார்.

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,000 இருக்கைககள் கொண்ட ‘கலைஞர் கலையரங்கம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கலைஞர் கலையரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது:-–

1986-–ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, நந்தனம் கல்லூரி மாணவர்கள் தான் முதலாவதாக வீதிக்கு வந்து போராடினார்கள். அந்த சமயம், கல்லூரியின் மாணவர் பேரவை தேர்தலின் தலைவராக தாயகம் கவி போட்டியிடுகிறார்.

அப்போது மாணவர்கள் எல்லோரும், “நாங்கள் உங்களை வெற்றி பெற வைக்கிறோம். அதன்பிறகு, கருணாநிதியை இந்த கல்லூரிக்கு அழைத்து வந்து பேச வைக்கவேண்டும்” என்றார்கள். அதன்படி அவரை வெற்றியும் பெற வைத்தார்கள். ஆனால் அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தி திணிப்புக்கு எதிராக சட்டநகல் எரிப்பு போராட்டத்தை அறிவித்ததாலும் கருணாநிதியை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அதை பார்த்து, அப்போதைய அரசு, கருணாநிதியை கல்லூரிக்குள் சென்று பேச அனுமதித்தது. கல்லூரிக்கு வருகை தந்த கருணாநிதி, இந்தி திணிப்புக்கு எதிராக உணர்ச்சி பொங்க பேசினார். அன்று அவர் பேசிய கருத்துகள், இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது.

தமிழ்நாடு என்பதற்கு அடிப்படையே தமிழ்தான். அந்த தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இப்போது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்பை கொண்டு வருகிறார்கள், நீட் தேர்வு கொண்டு வந்தார்கள், புதிய கல்விக் கொள்கை என்று வெவ்வேறு பெயர்களில் இதெல்லாம் வந்தாலும், ஒட்டுமொத்தமாக இதன் நோக்கம் தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என்பதுதான்.

இன்று கல்விக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை என்று பல தொந்தரவுகளை மத்திய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்ச்சிகளை, மாணவர்கள் புரிந்துகொண்டால் நம்முடைய இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளவே முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மா.சுப்பிரமணியன்,

கோவி.செழியன்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, க.கணபதி, உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி கமிஷனர் சுந்தரவல்லி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *