மத்திய அரசு வழங்கியது
சென்னை, ஏப்.19-
தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு ரூ.5.83 கோடி வழங்கி உள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பை தொடருவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 600 வரையிலும், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.10,100 முதல் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 700 வரையிலும், முதுகலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.47 ஆயிரம் முதல் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையை பெறுவதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2½ லட்சமாகவும், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சமாகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இந்த நிதி உதவித்தொகையை பெறுவதற்கு மாற்றுத்திறனாளி மாணவ-– மாணவிகள் அளித்த விண்ணப்பங்களில் 3,405 விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் தற்போது வரையில் 2,381 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு ரூ.5 கோடியே 82 லட்சம் 99 ஆயிரம் தேசிய கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,024 பேருக்கு விரைவில் தேசிய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு விடுவிக்கும்.