சென்னை, ஜன. 29–
“தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடியரசு தின உரையில் “தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என்கிற பெயரில் தலையங்கம் வெளியிட்டு ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
அதில், தமிழ்நாட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம்’ நினைத்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர். எவ்வளவு கெட்ட எண்ணமும் குறுமதியும் கொண்டவராக ரவி இருக்கிறார் என்றால், குடியரசு தினத்தன்று அவர் விடுத்த அறிக்கையே போதும். அவரது இழி எண்ணத்தின் மொத்த படப்பிடிப்பாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.
“முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விட்டு மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார் ஆளுநர். இதற்கு என்ன ஆதாரம்? இப்படி வாய்க்கு வந்ததை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பேசலாமா? முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாது. வந்தாலும் போய்விட வேண்டும் என்ற துஷ்ட மனம் கொண்டவராக ஆளுநர் இருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளில் உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பானது ரூ.10.07 லட்சம் கோடி ஆகும். இதன் மூலமாக 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவை அனைத்தும் ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்லும் தகவல்கள் அல்ல. இவை அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளன. யாரும் சும்மா வந்து ஒப்பந்தம் போட மாட்டார்கள். தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது. இது ஆளுநர் ரவிக்குத் தெரியாதா?
2 வது பொருளாதார மாநிலம்
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை இந்திய அளவில் 2 வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்று சொல்கிறது. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 2.2 விழுக்காடு மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 14.96 விழுக்காட்டை விட மிகமிகக் குறைவு என்பதை தன்னைச் சுற்றி இருக்கும் துக்ளக் ரசிகர்களை விலக்கிவிட்டு அதிகாரிகளைக் கேட்டு தெரிந்து கொள்ளலாமே ஆளுநர்.
இந்திய நாட்டின் மொத்தப் பெண் தொழில் பணியாளர்களில் 41 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். சமூகத்தின் சரி பாதியான பெண்களின் சமூக பங்களிப்பானது பாதிக்குப் பாதி என்ற சூழலை எட்டும் அமைதி மிகு மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவர் விரும்பவில்லையா?.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic ForumWEF2025) ஆண்டுதோறும் மாநாடு ஒன்று நடக்கும். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தி.மு.க. அரசு அமைந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளாகத்தான் தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகள், வல்லுநர் குழுவும் பங்கேற்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றமானது சுவிஸ் வரைக்கும் பரவி இருக்கிறது. ஆனால் கிண்டியில் இருந்து கொண்டு ஒருவர், இன்னமும் பொய்யைக் கிண்டிக் கொண்டிருக்கிறார். ‘பூனை கண்ணை மூடிக் கொண்டதால் உலகம் இருண்டுவிடாது’ என்பதைத்தான் ஆளுநருக்குப் பதிலாகச் சொல்ல முடியும் என்று முரசொலி நாளிதழ் கடுமையாக சாடியுள்ளது.